சென்னை: நடிகர் கருணாஸ் தலைவராக உள்ள முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு புதிய தலைவரை நியமித்து கருணாஸால் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நிர்வாகிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்புக்கு தலைவராக உள்ளார். அதன் சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கருணாஸ் அறிக்கையொன்றை வெளியிட்டார் . அதில் அவர், 'என் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படையின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர். விரைவில் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும். அதற்குப்பின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஏற்கெனவே நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள் என் அதிகாரபூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் தற்காலிகமாகவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மதுரையில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது.
நடிகர் கருணாஸை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிலிருந்து நீக்குகிறோம். இனிமேல் அவர் முக்குலத்தோர் புலிப்படை அறக்கட்டளைக்கு மட்டுமே அறங்காவலராக செய்லபடலாம். கட்சியின் இடைக்காலத் தலைவராக சந்தனபாண்டி நியமிக்கபடுகிறார். எங்கள் மேல் கருணாஸ் கூறியுள்ள குற்றசாட்டுகள் உண்மையில்லை..ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.