புதுதில்லி: ஆர்.கே நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில்புகார் செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு இடைதேர்தல் நடக்க உள்ளது. அதில் அதிமுக இரு அணிகளாக போட்டியிடுகிறது. சசிகலா அணியின் சார்பாக டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பன்னீர்செல்வம் அணியினைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகச் சென்று புகார் அளித்தனர்.