சென்னை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை அடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டைமாவட்டம் நெடுவாசல் உள்ளிட்டநாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அரசு அனுமதி வழங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பின்னர் மத்திய பெட்ரோலியத் துறை வெளியிட்ட அறிக்கையில் பொதுமக்களின் அச்சத்தை ஆறு மாதங்களுக்குள் தீர்த்த பின்னரே திட்டபணிகள் துவக்கப்படும் என்று விளக்கமளித்து.
இதனால் திருப்தியடையாத அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக வலைத்தளங்களில் இன்று காலையிலிருந்து தகவல் பரவியது.
இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் கணிசமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.