சென்னை: பல்வேறு துறை செயலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் 'திடீர்' ஆலோசனை நடத்தினார்.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் இன்று காலை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை ஒன்றை நடத்தினார். சமீபத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, திட்ட அமலாக்கம் குறித்து அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
அதன் பின்னர் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உள்ளிட்டோருடன் தலைமைச் செயலாளர் தனியாக ஆலோசனை நடத்தினார். விரைவில் ஆர்.கே.நகர் சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனையும், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக எழுந்த தகவல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.