மணல் குவாரிகளின் எண்ணிக்கை குறைவால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டுதல், மெட்ரோ ரயில் பணிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்தல், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு தேவையான மணல் ஆற்றுப்படுகையில் அமைத்துள்ள குவாரிகளில் இருந்து கிடைக்கிறது. இத்தொழிலில் கட்டுமான பணியாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் என 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது.
ஆனால், மணல் தட்டுப்பாடு காரணமாக 2 ஆயிரம் மணல் லோடு மட்டுமே கிடைக்கிறது. இதனால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்து வரும் மணல் குவாரிகள்: பல்வேறு காரணங்களால் பெரும்பாலான இடங்களில் மணல் குவாரிகளும், சேமிப்பு கிடங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதுமான மணல் கிடைக்காத நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு: குவாரிகள் குறைந்ததால் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு லோடு மணல் தற்போது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
2014 -இல் ஒரு லோடு மணலின் விலை ரூ.16 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை இருந்தது. அதுவே 2015 -இல் ரூ.19 ஆயிரமாகவும், 2016 -இல் ரூ.20 ஆயிரமாகவும் விலை உயர்ந்தது.
தற்போது மணல் தட்டுப்பாட்டால் ரூ 6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மணல் விலை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது:
குறைந்த அளவே மணல் குவாரிகள் செயல்படுவதால் வாரத்திற்கு ஒரு லோடு மட்டுமே கிடைக்கிறது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ளோர் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கெனவே டீசல் விலை, சுங்கம் வரி, காப்பீட்டு செலவு போன்றவை அதிகரித்துள்ளதால் லாரி தொழில் முடங்கும் நிலையுள்ளது. இந்தத் தொழில் புத்துயிர் பெற, மணல் குவாரிகளை அதிக அளவில் தொடங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார் அவர்.