முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராக வியாழக்கிழமை (மார்ச் 30) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடும் சோதனைகளுக்குப் பிறகு... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பி.ராம மோகன ராவ். அவருடைய அலுவலகத்திலும் (தலைமைச் செயலகம்), வீட்டிலும் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சத்துக்கு புதிய நோட்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தலைமைச் செயலர் பதவியிலிருந்த பி.ராம மோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு பி.ராம மோகன ராவுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் தமிழக அரசு மீண்டும் பணி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுவரை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலர்-இயக்குநராக இருந்த கே.ராஜாராமன், நில நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர்-ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.