சென்னை: சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான குவாரிகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல்வேறு கணக்கு வழக்குகளை, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தான் கவனித்து வந்தார் என்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
எனவே, அமைச்சர் மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், புதன்கிழமை மாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு ரம்யாவுக்கு அழைப்பாணை அனுப்பினர்.
இந்த சம்மனை அடுத்து, இன்று காலை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான ரம்யாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்த விவரம்:
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.
இச்சோதனையில் ரூ.5 கோடி பணமும், ரூ.89 கோடியை வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணமும் வருமான வரித்துறையிடம் சிக்கியது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கீதா லட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை செய்தனர்.
முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ள வருமான வரித்துறை, அடுத்த கட்ட விசாரணைக்குத் தயாராகி வருகிறது. இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் விசாரணை செய்வதற்காக வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.