அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது.
கோடைக்காலத்தின் உச்சம் என்று கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் மே 4-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 60 மி.மீ., திருவாரூர் மாவட்டம் ஒரத்தநாடு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கோவை மாவட்டம் வால்பாறையில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும் வெப்பம் சற்று அதிகரிக்கும். அதே சமயம் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழையும் பெய்யும்.
கடலோர மாவட்டங்களைப் பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும். கடற்காற்று நிலப்பரப்புக்குள் நுழைவதால், உள்மாவட்டங்களைக் காட்டிலும் வெப்பம் சற்று குறைவாகக் காணப்படும் என்றனர்.
9 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. ஆனால் சென்னை, கோவையில் வெயில் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகப் பதிவானது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
கரூர் பரமத்தி 106
வேலூர் 105
திருத்தணி, திருச்சி 104
பாளையங்கோட்டை,
மதுரை 103
திருப்பத்தூர் 102
சேலம் 101
தருமபுரி 100
சென்னை, கோவை 98