நில இழப்பீட்டுத் தொகை நிலுவை: தஞ்சாவூர் கோட்டாட்சியர் ஜீப் ஜப்தி
தஞ்சாவூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு வழங்குவதில் நீண்டகாலமாக நிலுவை இருந்ததால், நீதிமன்ற ஆணைப்படி கோட்டாட்சியரின் ஜீப் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1979ஆம் ஆண்டில் நிலம் கையப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு வருவாய்த் துறையினர் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், பாதி தொகை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மீதித் தொகை வழங்கப்படவில்லை.
இதனால், நில உரிமையாளர்கள் தஞ்சாவூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வருவாய்த் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.
ஆனால், நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நில உரிமையாளர்கள் மீண்டும் தஞ்சாவூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, கோட்டாட்சியரின் அசையும் சொத்துகளை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் அண்மையில் ஆணை பிறப்பித்தது.
இதன்படி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த ஜீப்பை நீதிமன்றக் கட்டளை நிறைவேற்றுநர் வனிதா ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு வந்தார்.
இதுகுறித்து நில உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர். கோவிந்தராஜன் தெரிவித்தது:
ஏறத்தாழ 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குவது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பகுதி மட்டுமே கொடுத்தனர். நிலுவைத் தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக நிறைவேற்று மனு தாக்கல் செய்ததன் பேரில், நீதிமன்ற ஆணைப்படி கோட்டாட்சியரின் ஜீப் ஜப்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.