சென்னை: ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக அரசு அதிகாரி ராஜ மீனாட்சி கூறிய குற்றச்சாட்டு குறித்து 4 நாட்களுக்குப் பின் அமைச்சர் சரோஜா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அமச்சர் சரோஜா கூறியிருப்பதாவது, பணியிடமாற்றம் கோரிக்கை நிறைவேற்றாததால் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அவர் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானது என்று ராஜ மீனாட்சியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக நலத்துறை அதிகாரி ராஜ மீனாட்சி மீது துறை ரீதியாக பல புகார்கள் இருந்த நிலையில், அவர் மீது அரசு தரப்பில் இருந்து விசாரணை நடத்த இருந்த நிலையில் அதனை திசை திருப்பவே அவர் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். முதலில், என்னை சந்திக்க வருமாறு ராஜ மீனாட்சியை நான் அழைக்கவே இல்லை என்று தெரிவித்தார்.
மே 7ம் தேதி பணி நீட்டிப்பு செய்யவும், பணியிட மாற்றம் செய்யவும் கோரி இருந்தார். ஆனால், அதனை செய்ய அரசு விதிகளில் இடமில்லை என்பதால் அவரது கோரிக்கையை பரிசீலிக்க மறுத்துவிட்டேன்.
இதனால், மக்கள் பணியாற்றி வரும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அபாண்ட புகார் கூறியுள்ளார். நிதி கையாடல் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.