தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. மே 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். இந்நிலையில் கத்திரி வெயிலின் உச்சகட்ட காலம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வடதமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 22 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மே 19 (வெள்ளிக்கிழமை), 20 ஆகிய இரு தினங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடதமிழகத்தில் அனல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செயற்கைக்கோள் படத்தில் அதிக அளவில் மேகம் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, அதிகமாக உருவாகியுள்ள மேகம் காரணமாக மழை பெய்தால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று தெரிவித்தனர்.