புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தனது குரல் மாதிரியை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெறுவதற்காக, சுகேஷ் என்ற தரகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவுகள் தில்லி காவல்துறை வசம் உள்ளது.
அது உண்மைதானா என்பதை கண்டறியும் வகையில், டிடிவி தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய அனுமதி கோரி தில்லி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு நீதிமன்றத்திலேயே டிடிவி தினகரன் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், இன்று தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன், அங்கு குரல் மாதிரியைப் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குரல் மாதிரியைப் பதிவு செய்ய இடமில்லை என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.