முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த மார்ச் மாதம் போலீஸார் நடத்திய சோதனையின் போது இரண்டு செல்லிடப்பேசிகள், சிம்கார்டு, சார்ஜர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், முருகன் மீது பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மற்றவர்களைச் சந்தித்துப் பேச முருகனுக்கு சிறை நிர்வாகம் 3 மாதங்களுக்குத் தடை விதித்தது.
மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முருகன் வேலூர் நீதிமன்றத்தில் 4வது முறையாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.