கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி

கல்வியை மாநில அரசின் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி
புதுக்கோட்டை: கல்வியை மாநில அரசின் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியது:
 1950-ல்  கொண்டுவரப்பட்ட புதிய இந்திய அரசியல் அமைப்பில் கல்வி மாநிலப் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. அந்த நிலையே நீடிக்க வேண்டுமென அனைத்துக் கல்விக் குழுக்களும் கூறியதை அப்போதைய பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார். அவருக்குப்பிறகு வந்த இந்திராகாந்தியால்  1976- ல் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையின்போது, 26 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்த கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
அதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும். இதைச்செய்யாமல், தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவது கல்வித்தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது. மத்திய அரசு ஹைட்ரோகார்பன் மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த கூடாதென வலியுறுத்தி  அப்பகுதி மக்கள்  அமைதி வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கி உடனடியாக  போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்முறை தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுத்த நிறுத்த அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி கடந்த ஓராண்டாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும்  ஆட்சியாகவே இருந்து வருகிறது. அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியில்லை. பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் இரண்டு அணிகளையும் வைத்துள்ளது. இந்நிலையில்,  ஓராண்டு சாதனை என எதைதயும் கூறமுடியாது. இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டும். அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரிவைப் பயன்படுத்தி அதிமுக அரசை கலைக்க வேண்டுமென நாங்கள் கூறவில்லை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும்  அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 
நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கினால் தமிழக அரசியல் அவருக்கு சாதகமாக அமையும். ஆனால் அவரை மதவாத சக்திகள் தங்களுடைய  கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்  நினைக்கின்றன. அவர்களது பிடியில் ரஜினிகாந்த் சிக்காமல் இருக்க வேண்டும். மதிமுக பொதுச் செயலர்  வைகோ பிணையில்  வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பம்.  அரசியலில் இருந்து அவர் விலகுவார் என்ற கருத்து தவறு, வீண் வதந்தி என்றார் தொல். திருமாவளவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com