பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை (மே 24) சந்தித்துப் பேசுகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தில்லியில் பிரதமர் மோடியை காலை 11.30 மணி முதல் 12 மணிக்குள் அவர் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பல திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியைக் கோருவது, தமிழக மீனவர்கள் பிரச்னை போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி விவாதிக்கவுள்ளார். தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் சந்திப்பின் போது அவர் அளிக்கவுள்ளார்.
அரசியல் ரீதியான சந்திப்பா? அதிமுகவின் மற்றொரு அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்தவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.