சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ மீது தேசத் விரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் சென்னை பெருநகர 14 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு கடந்த மாதம் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கு வைகோ மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வைகோ, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில், 51 நாள்கள் நீதிமன்றக் காவலை சிறையில் கழித்த பின்னர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வைகோ திடீரென செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், எந்தவித நிபந்தனை விதிக்காமல், சொந்த ஜாமீனில் செல்ல வைகோவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.