சிவகாசி: தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டால் நான் தூக்கில் தொங்கத் தயார் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பாலில் ரசாயனம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில், 'அவ்வாறு பேசியவர் யார், ஒரு தனியார் பால் நிறுவனத்தின் முகவர். நான் சொன்ன கருத்தால் அவருக்கு வரும் கமிஷன் குறைகிறது. அந்த வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.
தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதை என்னால் நிரூபிக்க முடியும். ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர்கள் நிரூபித்துவிட்டால் நான் என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அவ்வளவு ஏன் தூக்கில் தொங்கத் தயார்' என்று கூறியுள்ளார்.