சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் 2 துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
துணை வேந்தர்கள் நியமனத்தில் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், சென்னை பல்கலைக் கழக துணை வேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக பரிந்துரைக்கப்பட்ட 3 பேரை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துவிட்டதாகவும் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மோகன், கருணாமூர்த்தி, ஜெயக்குமார் என பெயர்களை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது.
மேலும் தமிழகத்தில் துணை வேந்தர்கள் இல்லாமல் இயங்கும் 12 பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பல்கலைக் கழக துணைவேந்தர் கையொப்பம் இல்லாததால் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.