இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யத் தடை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து விலக்குப் பெறும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உழவர்களின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுவது மாடுகள்தான். அவர்களின் வாழ்வில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் தருணங்களில் உதவுவது மாடுகள்தான்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடையால், உழவர்கள் அவசரத் தேவைக்கு மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடைகள் பராமரிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பிரிவில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது. இந்தச் சூழலில் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் விரோத முடிவை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.
ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து 5 நாள்களாகியும், இதுகுறித்து தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை த அரசு கூட்ட வேண்டும். இதைச் செய்யத் தவறினால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.