மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
மதுரையைச் சேர்ந்த செல்வ கோமதி மற்றும் ஆசிக் இலாஹி பாபா ஆகிய இருவர் தொடர்ந்த பொது நலன் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற கிளை ஒப்புக் கொண்டது. அதனபடி விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.
இதில், 1960 மிருகவதை தடுப்புச் சட்டத்தின் சரத்துகளில் புதிதாக இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது, இறைச்சிக்காக மாடுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சேர்க்கப்பட்டுள்ள சரத்துகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், உணவு விஷயத்தில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசின் பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறவும், மத்திய அரசின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்யவும் உத்தரவிடக் கோரி மனுதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
வழக்கு விசாரணையின் பொழுது இரு தரப்பு வாதத்தினையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ' இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நான்கு வாரம் இடைக்காலத் தடை விதிக்கிறோம்' என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.