தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் நடைபெற பாட்டாளி மக்கள் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
கோவையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மின் மோட்டாருக்கு 3 விதமான வரிகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும்போது தொழிற்கூடங்கள் பாதிக்கப்படும்.
எனவே, ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு சந்தை ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாயிகளே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி, விவசாயம், நீட் தேர்வு, கல்விக் கொள்கை போன்ற பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த 6 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.3.5 லட்சம் கோடி அதிகரித்து தற்போது ரூ. 5 லட்சத்து 74 ஆயிரம் கோடியாக உள்ளது.
திரைப்பட நடிகரால் தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. நடிகர் ரஜினிகாந்த் என்னை சிறந்த நிர்வாகி என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் நடைபெற நடிகர் ரஜினிகாந்த், பாமகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.