சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மது விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செயதுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நானும் எனது நண்பரும் சமீபத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபானம் வாங்கிக் குடித்தோம். அதன் காரணமாக எனக்கும் அவருக்கும் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு உண்டானது.
பின்னர் சந்தேகத்தின் பேரில் நாங்கள் அருந்திய மதுபான மாதிரியை தமிழக அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைச் சாலை ஒன்றில் பரிசோதனை செய்தோம். அதில் குறிப்பிட்ட மதுபானத்தில் டார்டாரிக் அமிலத்தின் அளவானது அனுமதிக்கப்பட்ட அளவினை விட மிகவும் அதிக அளவில் உள்ளது. இது மனிதர்கள் அருந்தவே தகுதியற்ற ஒன்றாகும்.
எனவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மது வகைகளை விற்க தடை விதிக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்து தரமற்ற மது வகைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.