குன்னூர் -மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் அடர்லி - ஹில்குரோவ் இடையே செவ்வாய்க்கிழமை சிறிய பாறை ஒன்று விழுந்ததால், உதகை மலை ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக குன்னூர் வந்து சேர்ந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை பெய்கிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்மழை பெய்தது.
இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், அடர்லி -ஹில்குரோவ் இடையே பாறை ஒன்று விழுந்தது.
வழக்கம் போல், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு காலை 7.10 மணிக்கு 165 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் பாதையில் சிறிய பாறை விழுந்து கிடப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மலை ரயில் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சுமார் 30 பேர் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்; சிறிய பாறை என்பதால் அதனை உளியால் உடைத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது.
இதனால், காலை 10.30 மணிக்கு வர வேண்டிய மலை ரயில், 45 நிமிடங்கள் தாமதமாக காலை 11.15 மணிக்கு குன்னூரை அடைந்தது. அதன்பின்னர் உதகைக்குப் புறப்பட்டுச் சென்றது.