பாம்பன் அருகே வியாழக்கிழமை பாக். நீரிணை பகுதியில் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது போன்று இந்திய கடற்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணை ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் நவ. 2-ஆவது வாரம் இந்திய கடற்படை விரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது வழக்கம்.
உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப் படை தளத்தில் இருந்து வீரர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று பயிற்சியில் ஈடுபடுவர்.
இதன்படி, உச்சிப்புளியில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து வியாழக்கிழமை 3 ஹெலிகாப்டர்களில் கடற்படை வீரர்கள் புறப்பட்டு, பாம்பன் அருகேயுள்ள பாக். நீரிணைப் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு கடலில் படகு கவிழ்ந்து அதில் மீனவர்கள் சிக்கிக்கொள்வது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் ஹெலிகாப்டரை கடல் மட்டத்திற்கு சிறிது உயரத்தில் நிறுத்தியபடி, கடற்படை வீரர்கள் கடலில் குதித்து மீனவர்களை மீட்பது போன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.