இலவச செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு, கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் எச்சரித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் அனைத்து கேபிள் டிவி இணைப்புகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. இதற்காக 70. 52 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படவுள்ளன. செட்டாப் பாக்ஸ் இணைப்புக்காக பல இடங்களில் கேபிள் ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.500 முதல் ரூ.700வரை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. செட்டாப் பாக்ஸ் பொருத்துவதற்கான (ஆக்டிவேஷன்) கட்டணமாக வாடிக்கையாளர்கள் ரூ.200 செலுத்தினால் போதும். கூடுதலாக பணம் வசூலித்தால் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.