சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று ஒரு நாள் மட்டும் மழை பெய்யும். நாளை முதல் மழை படிப்படியாகக் குறைந்து விடும்.
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்ததால், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு குறைந்தது.
இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, இன்று பகல் நேரத்தில் மழை வாய்ப்பு உண்டு. நாளை முதல் இது படிப்படியாகக் குறைந்துவிடும். வடக்கு நோக்கி நகர்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வது இன்றே கடைசியாக இருக்கும்.
இன்று இரவு வரை சென்னையில் மழை பெய்யும். சில சமயங்களில் பலத்த மழையாகவும் இருக்கும்.
நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் அதிர்ஷ்டம் இருந்தால் நாகை மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு உண்டு. கோவை, நீலகிரியின் சில பகுதிகள், திண்டுக்கல் பகுதிகளுக்கு மழை வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். பரவலாக மழை இருக்காது என்று பதிவிட்டுள்ளார்.