திருப்பூர்: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், இன்று திருப்பூரில் பசுமை தமிழகம் 'ஒரு முகம் ஒரு மரம்' என்ற தலைப்பில் ஐந்து வருடத்தில் 7 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் தொரவளூரில் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்து அவர் பேசியதாவது,
மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல், விவசாய விரிவாக்கம் இதெல்லாம் தண்ணீர் தேவையை அதிகரித்துள்ளது. இதனால் சில நாடுகள் மறுசுழற்சி முறையைக் கொண்டுவந்துள்ளனர். ஆனால் நம் நாட்டில் மழை நீர் சேகரிப்பதன் மூலமாக நமக்கான தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். மழை நீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கலாம்.
மக்கள் அனைவரும் மழை நீர் சேகரிக்க வேண்டும் என்ற பொறுப்பும், விழிப்புணர்வும் தேவை என்று அவர் கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.