தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வளப்பக்குடி நடுப்படுகை வடக்கு வாய்க்கால்காரத் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது முதல் மகன் சதீஷ்பாபு (17). இவர் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தம்பி சந்தோஷும் இதே பள்ளியில் 6 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்த சதீஷ்பாபு சக மாணவர்களுடன் சகஜமாக பேசியுள்ளார். தொடர்ந்து அவரைக் காணவில்லையாம். இந்த நிலையில், மாணவர்கள் தங்களது வகுப்பறைக்கு சென்றபோது, அங்கிருந்த மின்விசிறியில் நைலான் கயிறால் சதீஷ்பாபு மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.