மீன்வலை உற்பத்தி பாதிக்காமல் இருக்க ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வருமானவரித் துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. இப்போது நடக்கும் சோதனையில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை. பாஜக தவறுக்கு துணை போகாது. தவறு செய்பவர்களைத் தண்டிக்காமலும் விடாது. கருப்புப் பணத்தைக் கண்டறியவே சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவினரே அழித்து விடுவார்கள். திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மோடி சந்திப்பில் அரசியல் இல்லை. ஜெயலலிதாவை பிரதமர் மோடி மருத்துவமனையில் சந்திக்காததற்கு அங்கிருந்த சூழ்நிலையே காரணம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தமிழகத்தில் நேரும் விபத்துக்களுக்கு மதுபோதையே காரணம். விபத்துக்களால் ஏற்படும் 75 சதவீத மரணங்களுக்கு மதுவே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பை அமல்படுத்தவே ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இதில், மீன்வலை உற்பத்திக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், குமரி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் உள்ள மீன்வலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் தொழில் முடங்கிப் போவதாகவும் கூறி, மீன் வலைக்கான வரியை குறைக்கக் கோரினர். இதுகுறித்து நிதி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீன் வலைக்கான வரி 5 சதவீதமாக அண்மையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குமரி மாவட்டத்தில் உள்ள 110 மீன்வலை உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இங்கு பணிபுரியும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றார் அவர்.