டிச.3 முதல் தமிழகத்தில் 2000 ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 2000 ரேஷன் கடைகள் முன்பு வரும் டிசம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்...


புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 2000 ரேஷன் கடைகள் முன்பு வரும் டிசம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி பகுதியின் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 200-க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி பிரதேச செயலாளர்சங்கர் வரவேற்றார். தலைவர் நி.தமீம் நன்றி கூறினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு; 
இந்த ஆண்டு பருவமழை தாமதமாக துவங்கியதும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி தான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் மிகத் தாமதமாகவே விவசாயப் பணிகளை துவங்கினர். கூட்டுறவு வங்கிகளில் கடன் கோரிய விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், நவம்பர் 30-ந் தேதிக்குள் இந்த ஆண்டு பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியம் செலுத்த வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது சரியில்லை. அனைத்து பயிர்களுக்கும் பிரிமியம் செலுத்துவதற்கான காலத்தை டிசம்பர் 15 வரை நீட்டித்து அரசு உத்தரவிட வேண்டும்.

கடந்த ஆண்டு அரசு அறிவிப்பை ஏற்று டிசம்பர் 15-ந் தேதி வரை விவசாயிகள் பிரிமியம் கட்டியுள்ளனர். ஆனால் டிசம்பர் 5-ம் தேதி வரை பிரிமியம் கட்டியவர்களுக்கு மட்டுமே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருப்பதை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு பயிர்க்காப்பீட்டு பிரச்னையில் தலையிட்டு 2016-17ம் ஆண்டுக்கு இதுவரை பயிர்க்காப்பீட்டுதொகை வழங்கப்படாத விவசாயிகள் அனைவருக்கும், அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2016 டிசம்பர் 15 வரை பிரிமியம் செலுத்திய விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும். கரும்பு விலையை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கூடாது:

2017-18 ஆண்டுக்கு தமிழக அரசு இதுவரை பரிந்துரை விலையை அறிவிக்கவில்லை. ரங்கராஜன் குழு பரிந்துரை அடிப்படையில் வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்திட மாநில அரசு பரிசீலித்து வருகிறது. வருவாய் பங்கீட்டு முறை என்பது சர்க்கரை, பக்காளி, மொலாசஸ் இவற்றை விற்று வரும் வருவாயில் 70 சதத்தை கரும்புக்கு விலையாக கொடுத்திடும் முறையாகும்.

தமிழ்நாட்டில் இந்த முறையை அமல்படுத்தினால் கரும்புக்கு ஆதார விலை கிடைக்காது. 2016-17ல் கடந்த ஆண்டில் மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையான ஒரு டன்னுக்கு ரூ.2750 கூட நடப்பு பருவத்திற்கு கிடைக்காது. 2017-18 பருவ கரும்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள டன்னுக்கு ரூ.2550 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும். எனவே வருவாய் பங்கீட்டு முறை கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பானது. இந்த முறையை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது.

தற்போது நடைமுறையில் உள்ளபடி மத்திய அரசு விலையுடன் சேர்த்து அறிவித்து வழங்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த விலையை தரவில்லை. விலையை அறிவித்த தமிழக அரசு சட்டரீதியில் நடவடிக்கை எடுத்து கரும்பு பண பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.

பொது வினியோக முறையை சீர்குலைப்பு:
தமிழ்நாட்டில் 34773 நியாய விலைக்கடைகளும், 309 கெரசின் பங்குகளும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 1,98,84,645 குடும்ப அட்டைகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 6,74,67,992 பேர் பயன் பெற்று வருகின்றனர். தமிழக ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை,மண்ணெண்ணெய், பருப்பு, உளுந்து, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு கிலோ ரூ.13.50 என ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த சர்க்கரையின் விலை திடீரென ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் வழங்கப்படும் உளுத்தம்பருப்பு இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படக் கூடிய துவரம் பரும்பும் மைசூர் வகையைச் சேர்ந்த தரம் குறைந்த பருப்பே வழங்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மண்ணெண்ணெய் விலையை உயர்த்திட உள்ளனர்.

மேலும் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அட்டைகளுக்கு பொருள் மறுக்கப்படும் நிலை உள்ளது. எழைகளுக்கு மானியங்களை வெட்டிக் குறைக்கின்ற மத்திய பாஜக அரசின் கொள்கைக்கு ஆதரவாக தமிழக அதிமுக அரசும் பொதுவினியோக முறையை முற்றிலும் சீர்குலைத்து வருகின்றனர்.

பொதுவினியோக முறை சீர்குலைக்கப்பட்டால் பல லட்சம் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். இதை வலியுறுத்தி வரும் டிசம்பர் 3 முதல் தொடர்ந்து 7 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 2000 ரேசன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com