தஞ்சை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை, தற்போது வருமான வரித்துறை சோதனை என அடுத்தடுத்த நெருக்கடிகளால் மன வேதனைக்கு ஆளான திவாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலாவை ஜெயலலிதா முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், எங்களை நிராயுதபாணியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த எனது அக்காவை தன்னந்தனியே தவிக்க விட்டுச் சென்றுவிட்டார்.
தனக்குப் பிறகு சசிகலாவுக்கு எந்த பாதுகாப்பும் செய்யாமல் அவர் சென்றுவிட்டார். சசிகலாவின் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. எல்லா பெண்களுக்கும் தற்போது சசிகலா ஒரு சரியான உதாரணம். சசிகலாவை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிகிச்சையின் போது, விடியோ எடுத்து வைத்துக் கொள், நம்மிடமே துரோகக் கும்பல் இருக்கிறது என்று சசிகலாவுக்கு எச்சரிக்கைப்படுத்திய ஜெயலலிதா, சசிகலாவுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தாமல் போனதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறினார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலராக பதவியேற்றுக் கொண்ட வி.கே. சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்கவிருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சிறைக்குச் சென்றார்.
தனது உடன் பிறந்த சகோதரி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றதால் மிகுந்த மன வேதனையில் இருந்த திவாகரன், அடுத்து வருமான வரித்துறையின் சோதனையால் அதிருப்தி அடைந்திருக்கலாம். அந்த ஆதங்கத்தைத்தான் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே கூறப்படுகிறது.