தமிழக விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீட்டுத் தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2016 - 17 ஆம் ஆண்டில் சம்பா சாகுபடிக்கான பாரதப் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்தியுள்ளனர். வறட்சியால், சம்பா பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன.
அதற்கான இழப்பீட்டு தொகையாக ரூ. 20,028 கோடியை 6 இலட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்கியுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களான தேசிய வேளாண் காப்பீட்டுக் கழகம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற நிறுவனங்கள் அரசின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு வழங்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வருகின்றன.
இதுதொடர்பாக விவசாயிகள் பல முறை முறையீடு செய்தும், எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
தற்போது சம்பா நடவுப் பணி நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறாதபோதும், கடும் சிரமத்துக்கிடையே நடப்பாண்டுக்கான பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 403 வீதம் செலுத்தி வருகிறார்கள்.
விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணம், உரிய நேரத்தில் கிடைத்தால்தான் அவர்களால் விவசாயத்தைத் தொடர முடியும். எனவே, இழப்பீட்டு தொகை காலம் தாழ்த்தாமல் கிடைப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.