சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் உட்பட 187 இடங்களில் நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக சோதனை தொடர்ந்தது.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி இரவு போயஸ் தோட்ட இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பென்-டிரைவ் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.
இதற்கிடையே, சோதனை நடத்தப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் இன்று விளக்கம் அளித்துள்ளனர்.
போயஸ் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ் மற்றும் லேப்டாப்களில் சோதனை நடந்து வருகிறது. தேவையெனில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும்.
போயஸ் தோட்ட இல்லத்தில் 5 அறைகளின் சாவிகளும் இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டன.
போயஸ் தோட்ட இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்படவில்லை. சசிகலா பயன்படுத்திய 4 அறைகள் மற்றும் நேரடி உதவியாளர் பூங்குன்றனின் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.