திருக்குறள் நெறியில் வாழ்ந்தால் மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்
திருக்குறள் நெறியில் வாழ்ந்தால் மதச்சார்பற்ற மனம் சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என மத்திய கலால் துறை உயர் அதிகாரி சி.ராஜேந்திரன் வலியுறுத்தினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியம் அறக்கட்டளை தொடக்க விழா சென்னை தரமணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ந.மணிமொழியம் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றிய சி.ராஜேந்திரன் பேசியது:
தமிழினம் போன்ற இன்னொரு இனத்தை எங்கும் நான் பார்க்கவில்லை. இந்த இனத்தில் பிறந்தவர்கள் தவம் செய்தவர்கள். தமிழினம் இந்தளவுக்கு பெருமையாகப் பேசப்படுகிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
மூன்று ஆளுமைகள்: இந்தியாவின் மூன்று ஆளுமைகள் என மகாத்மா காந்தி, விவேகானந்தர், நேதாஜி ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த மூன்று பேரின் வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் தமிழர்கள். கலாசாரத்தையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் என்று விவேகானந்தரும் 'எனக்கும் தமிழகத்துக்கும் ரத்த ரீதியான தொடர்பு உள்ளது' என்று காந்தியடிகளும் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் நேதாஜியின் படையில் தமிழர்களே பெரும் பங்காற்றியுள்ளனர்.
திருக்குறளை மொழிபெயர்ப்பில் படித்தாலும் முன்னேறி விடலாம்; அதைத் தமிழில் படிப்பவர்கள் வரம் பெற்றவர்கள். ''அற வழியில் பொருள் ஈட்ட வேண்டும்; அவ்வாறு ஈட்டிய பொருளை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்'' என்பது வள்ளுவரின் வாக்கு. இது அனைவருக்கும் பொது மறை மட்டுமல்ல; பொது முறை என்றும் கூறலாம் என்றார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன்: கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் தொடர்பாக ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருக்குறளை ஒலி வடிவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழக அரபு மொழித் துறை பேராசிரியர் ஜாஹிர் உசைன் குரலில் பாடலாக உருவாகி வருகிறது.
மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் அருள்: தமிழக அரசின் சார்பில் திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார், பாரதிதாசன் நூல்கள் சீனம், அரேபியம், கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தற்போது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் நீங்கலாக மற்ற அனைத்து நூல்களும் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பங்கேற்றோர்: முன்னதாக ந.மணிமொழியம் அறக்கட்டளைச் சொற்பொழிவை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ, விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன், இயக்குநர் அனுராதா கணேசன், உலகத் திருக்குறள் பேரவை மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், முனைவர் பட்ட ஆய்வாளர் ரா.மேகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.