புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்காத அரசை கண்டித்து, இன்று ஊழியர்கள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 7 ஆண்டுகளாக 1311 பேர் தினக்கூலி (வவுச்சர்) ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்காத அரசை கண்டித்தும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலி ரூபாய் 398 யை நடைமுறைபடுத்த கோரியும், 10 மாதமாக ஊதியம் வழங்காததால் வறுமையில் உயிரிழந்த 9 ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தி வவுச்சர் ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊதியம் இல்லாமல் வறுமையில் வாடும் தங்களின் நிலையை அரசுக்கு உணர்த்தும் வகையில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் வீடுகளை தங்கள் குடும்பத்தினருடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.