ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக, செல்லிடப்பேசி வாட்ஸ்-அப் செயலியில் புகார் தெரிவிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
புகார் எண்கள்: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 1950, 1913 ஆகிய இலவச எண்களில் புகார் அளிக்கலாம். மேலும், 94441 23456 என்ற செல்லிடப் பேசியில் வாட்ஸ்-அப் செயலி வழியாக தகவல் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி:
தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆர்.கே.நகருக்கு பொருந்தும் அறிவிப்புகளை அரசு வெளியிடக் கூடாது. அமைச்சர்கள் அங்கு பிரசாரப் பணிகள் தொடர்பாக அரசு வாகனங்களில் பயணிக்கக் கூடாது.
கடந்த முறை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 33 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
எத்தனை வாக்காளர்கள்? ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 411 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 522 பெண் வாக்காளர்களும், 99 மூன்றாம் பாலினத்தவரும் சேர்த்து மொத்த 2 லட்சத்து 26 ஆயிரத்து 992 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு ஒரு வாரம் முன்பு வரை கொடுக்கலாம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் ஒரு வெளிமாநில அதிகாரி வாக்குப்பதிவை கண்காணிப்பார். மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.
கடந்த இடைத் தேர்தலின் போது வரவழைக்கப்பட்ட அளவில் சிறப்பு பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவர். இன்னும் 3 அல்லது 4 நாள்களில் அவர்கள் வரத் தொடங்குவர். ஆர்.கே.நகரில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரகசிய கேமராக்கள்: உடனடியாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை 61 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய உத்தியை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. முன்பு முக்கியத் தெருக்களில் ரகசியக் கேமராக்களை வைத்து கண்காணித்தோம். இந்த முறை குடியிருப்புப் பகுதிகளுக்குள் ரகசியக் கேமராக்களை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.