திரைக்கு வரவுள்ள நாச்சியார் திரைப்படத்தில் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நடிகை ஜோதிகா வசனம் பேசி உள்ளதாகக் கூறி அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் நாச்சியார் என்ற திரைப்படத்தின் விளம்பரம் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், காவல் அதிகாரி வேடத்தில் வரும் நடிகை ஜோதிகா ஒருவரை விசாரணை செய்யும்போது பெண்மையை இழிவுபடுத்தும் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கார் ஓட்டுநரான ராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 24) பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் சரவணபாபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் 28-ஆம் தேதி இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார்.