சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை நடைபெறவுள்ள அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதனைத் தொடர்ந்து கட்சிகள் தத்தமது வேட்பாளர் தேர்வில் மும்முரமாகின.
முதல்கட்டமாக திமுக கடந்த முறை போட்டியிட்ட வழக்கறிஞர் மருது கணேஷையே வேட்பாளராக அறிவித்தது.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.