சென்னை: தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் வரும் 6-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே. ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அவருக்குப் பதிலாக, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். அவர் ஓராண்டுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநராகவே தொடர்ந்து வந்தார்.
முதல்வர் ஜெயலலிதா மரணம், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சனிக்கிழமை வெளியிட்டார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரும் 5-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார். வெள்ளிக்கிழமை காலை (அக்.6) 9.30 மணியளவில் பதவியேற்க உள்ளதாகவும், ஆளுநர் மாளிகையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.