குன்னூர்: அரசினை விமர்சித்து கருத்து தெரிவிப்பதால் என் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்தால் சந்திக்கத் தயார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும் , திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குன்னூர் வந்துள்ளார்.
இந்நிலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலமெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் வேளையில் விரைவாக தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். அவர் மீதே ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது இவ்வாறு அரசே தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் டெங்குவிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் ?
இப்படி அமைச்சர் பற்றியும் அரசு பற்றியும் கருத்துக் கூறுவதால் என் மீதும் தேசத்து துரோக வழக்குப் பதிவதாக இருந்தாலும் அதனை சட்டப்படி சந்திக்கத் தயார்.
உத்தர பிரதேச மாநில சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு ஸ்டாலின் தனது பேட்டியில் தெரிவித்தார்.