அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டலத்தில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் 29 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டதுள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு தினங்களாக மழை பெய்து வந்தது.
திங்கள்கிழமை பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்): காஞ்சிபுரம் - 80, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் - 70, செங்கல்பட்டு, திருவையாறு - 50, எண்ணூர், திருத்தணி, ஆரணி, திருத்துறைப்பூண்டி - 40.
இதுதவிர, புதுக்கோட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சென்னை, வேலூர், நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வடக்கு ஒடிஸா முதல் வடக்கு கேரளம் வரை வங்கக்கடலில் பரவியிருந்த மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. மேலும் வடக்கு ஒடிஸாவில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.