காந்தி ஜயந்தி தினமான திங்கள்கிழமை, கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது.
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், ஏ.விஜயகுமார் எம்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், அங்குள்ள காந்தி மண்டபத்தின் மேல்தளத்தில் உள்ள துவாரத்தின் வழியாக அஸ்திக் கட்டடத்தில் பிற்பகல் 11.55 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. அப்போது அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சூரிய ஒளி விழுவதை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக காந்தி மண்டப ஊழியர்கள் ஒரு வெள்ளைத் துணியில் சூரிய ஒளியை விழச் செய்து காண்பித்தனர்.