மணல் விற்பனையை கண்காணிக்க குழு: தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மணல் விற்பனையை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கக்கோரும் மனுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மணல் விற்பனையை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கக்கோரும் மனுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு விவரம்:
ஆன்லைனில் மணல் விற்பனை செய்வதில் பொதுப்பணித்துறையினர் இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர். 
அதில், ஆன்லைனில் மணல் வேண்டி பொதுமக்கள் பதிவு செய்யும்போது, மணல் எடுத்துச்செல்லும் மணல் லாரிகளின் பதிவு எண், லாரி உரிமையாளரின் ஒப்புதல் மற்றும் மணலின் தொகைக்கான வரைவோலையுடன் பதிவு செய்ய வேண்டும். மற்றொன்று, லாரி உரிமையாளர்கள் மணல் வேண்டி பதிவு செய்யும்போது, லாரியின் பதிவு எண் மற்றும் மணலின் தொகைக்கான வரைவோலையை பதிவு செய்தால் போதுமானது. பதிவு செய்த 10 நாள்களில் மணல் வழங்கப்படும். அதற்கான குறுஞ்செய்தி பதிவு செய்தவர்களின் எண்ணுக்கு அனுப்பப்படும். குறுஞ்செய்தி பெறப்பட்ட 36 மணி நேரத்தில் மணலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பதிவு ரத்தாகும். இந்தப் பத்து நாள்களில் எப்போது வேண்டுமானாலும் மணல் கிடைக்கும் என்பதால் மணல் கேட்டு பதிவு செய்த நாளில் இருந்து லாரிகளை பொதுமக்கள் வாடகைக்கு எடுக்கின்றனர். இந்நிலையில் மணலை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்கள், மணல் எடுப்பதற்காக காத்திருக்கும் நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1400, மணல் எடுத்துச்செல்லும்போது கி.மீ.-க்கு ரூ.70 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
இதனால் ஒரு லோடு மணலுக்கான விலையின்றி கூடுதலாக ரூ.14 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மக்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. 
ஆன்லைனில் பதிவு செய்யும்போது லாரியின் பதிவு எண் இல்லையெனில் பொதுமக்களால் மணல் வாங்க முடியாது. இதன்மூலம் லாரி உரிமையாளர்கள் மறைமுகமாக மணலுக்கான விலையை நிர்ணயிக்கின்றனர். மேலும், சில லாரி உரிமையாளர்கள் தாங்கள் வாங்கும் மணலை பக்கத்து மாநிலங்களுக்கு கடத்துகின்றனர்.
மணல் விற்பனை தொடர்பான வழக்கு ஒன்றில், தமிழகத்தில் மணல் விற்பனையை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என 2010-இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. 7 ஆண்டுகள் ஆகியும் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
எனவே மணல் குவாரி மற்றும் மணல் விற்பனையை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்பு குழுவை உடனடியாக அமைக்கவும், மணலுக்காக பதிவு செய்யும்போதே, அதனை ஏற்றிச்செல்லும் வாகனம் தொடர்பான தகவல்களை பதிவு செய்வது கட்டாயம் என்ற விதியை ரத்து செய்தும், அதுவரை மணல் விற்பனைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com