இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் அதிமுக அணிகளைச் சேர்ந்தவர்களிடம் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) இறுதி விசாரணை நடைபெற்றது.
இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாகவும், இறுதி விசாரணை அக்டோபர் 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, செப்டம்பர் 29-ஆம் தேதி ஒன்றுபட்ட அதிமுக அணியினர் சார்பில் தமிழக அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஆர்.பி. உதயக்குமார், சி.வி. சண்முகம், மூத்த தலைவர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் அணியினர் சார்பில் வழக்குரைஞர் ராஜா செந்தூரபாண்டியன் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று விசாரணை மேற்கொண்டது. அப்போது, கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரி டி.டி.வி. தினகரன் தரப்பு கோரிக்கை வைத்தது.
ஆனால், இதற்கு பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தேர்தல் ஆணையம், வருகிற 13-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்த விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.