தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நீலகிரி, வால்பாறை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அரசு சார்பில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தலைமையில் எற்கெனவே ஐந்து முறை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், குன்னூரில் 6-ஆவது முறையாக குன்னூர் தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் தங்கவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொழிற்சாலை நிர்வாகத்தினர்,
தொழிலாளர் பிரதிநிதிகளான வால்பாறை அமீது, போஜராஜ், காந்தி, இன்கோசர்வ் இணை இயக்குநர் மணிவண்ணன், ஆனந்தன், ரமேஷ், மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 330 சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிர்வாகம் சார்பில் ரூ. 275 தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முடிவு ஏதும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.