ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஆர்.நல்லகண்ணு மீதான வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இச்சூழலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடன் நிவாரணக் கோரிக்கையை முன்வைத்து கடந்த ஏப். 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சென்னையில் தொடர் முழக்கப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே உள்ள காலியிடத்தில் காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்பட பலர்மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 143, 188-இன் கீழ் அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, அம்பத்தூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் விசாரணைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் எதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில், வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் மீது போராடுபவர்கள் மீது இதுபோன்று வழக்குப் பதிவு செய்து ஒடுக்குவது ஜனநாயக நடைமுறைகளை நிராகரிப்பதாகும்.
எனவே, ஆர்.நல்லகண்ணு உள்பட அனைவர் மீதுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும்.