சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (23) கொலை வழக்குத் தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்தனர்.
இதில் 15 பேருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், யுவராஜ் வேலூர் மத்திய சிறையிலும், அவரது கார் ஓட்டுநர் அருண் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் யுவராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது.
இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதின்றம் இன்று யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.