இணையதளம் மூலம் கட்டட திட்ட அனுமதி பெறும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கணினி மூலம் திட்ட அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை (www.ppacmda.tn.gov.in) முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் திட்ட அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அதற்குத் தேவையான ஆவணங்கள், திட்ட வரைபடங்கள் போன்றவற்றை இணையதளத்தின் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவுடன் அதற்குரிய ஒப்புகையை தங்களுக்கான உள்நுழைவில் (லாகின்) பெற முடியும். மேலும், இணையம் மூலம் பல்வேறு கட்டடங்களின் விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தின்
www.tnrea.in இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதியையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் கட்டட மனை மேம்பாட்டாளர்கள் தங்களது திட்டப் பணிகளையும், முகவர்கள் தங்கள் பதிவுகளையும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் திட்டங்களைப் பற்றிய இப்போதைய நிலையை பொது மக்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத் திட்டப் பணிகளின் குறைபாடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.