திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புதன்கிழமை தனியார் தோட்டத்துக்குள் புகுந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புப் படையினர் பிடித்தனர்.
பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் அய்யனாரப்பன் கோயில் அருகே மதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது மலைப்பாம்பு ஒன்று புகுந்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள், நிலைய அலுவலர்கள் மயில்ராஜ், மார்த்தாண்ட பூபதி ஆகியோர் தலைமையில் அங்கு சென்று அந்த மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 12 அடி நீளமும், 30 கிலோ எடையும் இருந்தது. அதை தீயணைப்பு வீரர்கள், பழனி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் பாம்பை பொருந்தல் ஜீரோ பாயிண்ட் வனப்பகுதியில் விட்டனர். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிணற்றில் 6 மலைப்பாம்புகள் மற்றும் அதன் முட்டைகள் கிடந்தது குறிப்பிடத்தக்கது.