ஆந்திரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மபள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், பூண்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநில அரசு அம்மபள்ளியில் கடந்த 1975-ஆம் ஆண்டு மழை நீரை சேமிக்க அணை கட்டியது. 6 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை, கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கன மழையால் நிரம்பியது.
மேலும், சித்தூர் மலை, வனப்பகுதிகளிலிருந்து அணைக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அணை நிரம்பியுள்ளதாலும், மேலும் 3,500 கனஅடி நீர் வருவதாலும் அம்மபள்ளி அணையிலிருந்து புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது, வியாழக்கிழமை காலை நிலவரப்படி 150 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பில் உள்ளது.
அம்மபள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்னும் ஓரிரு நாள்களில் பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.